திருச்சி: எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்பரசுவிடம் அதிகாரிகள் விசாரணை. |
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான தேர்தல் அதிகாரிகளால் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரூபாய் பணத்தை நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அன்பரசு கார் |
திருச்சி மாவட்டம் குழுமணி அருகே உள்ள எட்டரை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மனைவி திவ்யா எட்டரை பகுதி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது காரில் பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர், அவரது வீட்டுக்குச் சென்று, காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், அவர்களும் இந்த பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதியின் உறவினர். தேர்தல் செலவுக்காக நாமக்கல்லில் இருந்து மாவட்ட செயலாளர் பரஞ்சோதிக்கு ஏராளமான பணம் அனுப்பப்பட்டுள்ளதை குறிப்பெடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அன்பரசுவின் காரை பின்தொடர்ந்துள்ளனர்.
அதிகாரிகள் சோதனைக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கிருந்து பணம் பிரிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பஞ்சாயத்து தலைவி திவ்யா, அவரது கணவர் அன்பரசன், சிவப்பிரகாசம், பிரதாப் ஆகியோரிடம் போலீஸாரும், வருமான வரித் துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வருமான வரித்துறையினர் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் கட்சி மேலிடத்துக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் ரூ.1 கோடி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS